
இக்னைட், என்.ஐ.டி திருச்சியின் அதிகாரப்பூர்வக் கற்பிக்கும் குழுவாகும்.
என்.ஐ.டி திருச்சி மாணவர்களே இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களை ஜே.இ.இ மெயின் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியைக் கொண்ட இக்குழு, தனது வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது,

அரசு
மேல்நிலைப்பள்ளி, செவல்பட்டியின் மாணவரான அருண்குமார், என்.ஐ.டி திருச்சி மாணவர்களிடம் பெற்ற பயிற்சியின் பயனாக ஜே.இ.இ மெயின் நுழைவுத் தேர்வில் 98.24 சதவிகிதம் உடன் தேர்ச்சி பெற்று அகில இந்திய தரவரிசை பட்டியலில் 17061 இடமும் மற்றும் ஒ.பி.சி தரவரிசை பட்டியலில் 3649 இடமும் பிடித்துள்ளார்

“சென்ற வருடம் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது என்.ஐ.டி திருச்சி வளாகத்திலே பயிற்சி பெறும் வாய்ப்பினைப் பெற்றோம். அது வெற்றிக்கான பாதையில் என்னை ஊக்கப்படுத்தியது” என்கிறார் அருண்குமார்.

“பாடக்கருத்துகள் சரியான இடைவெளியில், அருண்குமாரின் பள்ளி நேரங்கள் மற்றும் அவனுக்கு பயிற்சியளிக்கும் குழு உறுப்பினர்களின் கல்லூரி நேரங்களையும் கருத்தில் கொண்டு சரியாக திட்டமிடப்பட்டுக் கற்பிக்கப்பட்டது.
ஜே.இ.இ மெயின் தேர்வு முறையைப் பழக்கப்படுத்த சரியான இடைவெளியில் பயிற்சி தேர்வுகளும், வாரத்திற்கு 50 மணிநேர வகுப்புகளும் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் ஊரடங்கு காரணமாக தொலைபேசி அழைப்புகள் மூலம் கற்பித்தோம். கவனித்ததில், வாய்மொழியாக விளக்குவது அவ்வளவு பயனுள்ளதாக இல்லை.
அதனால் பயிற்சியளிப்பவர்களுக்கு டிஜிட்டல் பேட்கள் அனுப்பப்பட்டு அதன்வழி கற்றலில் மாணவர்களுக்கும் மற்றும் பாடம் நடத்துபவருக்கும் தெளிவாக கற்பிக்கவும் மிகவும் உதவியது.
தற்போது நாங்கள் அருண் குமாருக்கு ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்விற்கான பயிற்சி தந்துகொண்டிருக்குறோம்” என்கிறார்
இக்னைட் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரோஹித். 2019 இல் இக்குழுவினரிடம் பயின்ற இரு மாணவர்கள் ஜே.இ.இ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று என்.ஐ.டி திருச்சியில் சேர்ந்துள்ளனர்.

மற்றொரு மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் சேரும் வாய்ப்பினைப் பெற்றார்.
கல்லூரியின் இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் அவர்கள் இக்குழுவை பாராட்டி, இத்தகு முயற்சிக்குத் தம் நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் இக்னைட், என்.ஐ.டி திருச்சியின் பல்வேறு வளாகம் தாண்டிய முயற்சிகளில் பங்கெடுப்பதில் ஒன்றாக, கல்லூரியின் நோக்கமான ‘உள்ளூருடன் இயைபுடையது’ என்பதை அடிக்கோடிடுவதாய் அமைகிறது எனச் சுட்டிக்காட்டினார்.

