திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அரசு தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
திருச்சி மாநராட்சி எல்லைக்குட்பட்டவர்கள் தான் கொரோனாவுக்கு தினமும் 800-க்கும் அதிகமான எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். புறநகர் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கட்டுப்பாட்டு பகுதி 108 ஆக உயர்வு
அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.
அதைத்தொடர்ந்து மாற்று ஏற்பாடு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
அதே வேளையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு, டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதன் காரணமாக கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
திருச்சி மாநகரில் கடந்த வாரம் 32 ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 42 ஆக அதிகரித்துள்ளதாக ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுபோல நகராட்சி பகுதிகளில் 43, கிராமப்புற பகுதிகளில் 23 என அதிகரித்துள்ளது.
இதில் துறையூரில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களான குட்டை கரைமேடு, குட்டக்கரை நாலு ரோடு, குட்டக்கரை முதல் சந்து, ஆண்டாள் அம்மன் சந்து, வி.கே.என்.காலனி, திருச்சி ரோடு நேரு நகர், காமராஜர் நகர் ஆகிய 7 பகுதிகளில் அதிக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை திருச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 108 ஆக அதிகரித்துள்ளது. அப்பகுதிகளில் தகரம் அடித்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.