திருச்சி கருமண்டபத்தில் மோட்டார் சைக்கிள் திருடும்போது ஆசாமி ஒருவன் கையும் களவுமாக பொதுமக்களிடம் சிக்கினான்.
திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி அசோக் நகர் மெயின் ரோட்டில் சுய உதவி குழுவுக்கான தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஊழியர்கள் சிலர் தங்கி வேலை செய்து வருகிறார்கள். தங்களது இருசக்கர வாகனத்தை காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்ட அலுவலக வளாகத்தில் நிறுத்தி இருந்தனர்.
இன்று மாலை மர்ம ஆசாமி ஒருவன் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை கள்ளச்சாவி போட்டு ஸ்டார்ட் செய்தான்.

அப்போது வாகனத்தில் இருந்து வந்த அலார சத்தம் கேட்டதும் அலுவலகத்திலிருந்து ஓடோடி வந்த 3 ஊழியர்கள், மோட்டார் சைக்கிள் திருட முயன்ற ஆசாமியை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அப்போது அந்த ஆசாமி,”தான் தற்கொலை செய்து கொள்வேன்” என மிரட்டல் விடுத்தான்.
உடனடியாக மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து வந்த கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் அவனை கைது செய்தனர்.
அவனது பெயர் பல் கார்த்திக் (வயது 22) என்பதும், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அன்பிலார் நகரைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.
கைதான பல் கார்த்திக் மீது, ஏற்கனவே மோட்டார் சைக்கிள்கள் திருடிய வழக்கு பல உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்கள்.