*உதயநிதி ஸ்டாலின் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா.. மாட்டாரா..?*
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டாம் என அக்கட்சி தலைமைக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
திமுகவின் தலைவராக கருணாநிதி இருந்தபோதும் சுமார் 40 ஆண்டுகாலம் கடுமையாக உழைத்தார் மு.க.ஸ்டாலின். இந்த உழைப்பின் விளைவாக கருணாநிதிக்குப் பின்னர் இயல்பாகவே ஸ்டாலின்தான் தலைவர் என தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். தமிழக மக்களும் உள்வாங்கிக் கொண்டனர்.
உதயநிதிக்கு ஓவர் முக்கியத்துவம்
ஆனால் ஸ்டாலின் மகன் உதயநிதியை திடீரென திமுகவுக்குள் கொண்டு வந்து அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்து, அடுத்த தலைவராக இப்பவே முன்னிலைப்படுத்துவது என்பதை இன்னமும் தமிழகம் ஏற்கவில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் கொடுக்கப்படும் செயற்கையான அதீதமான முக்கியத்துவம் அப்பட்டமாக பொதுமக்களிடத்திலும் அசூயையே உருவாக்கி வைத்திருக்கிறது.
உதயநிதியால் எதிர்மறை தாக்கம்
ஜனநாயக அரசியலைப் பற்றி திமுக எந்த ஒரு கருத்தையுமே சொல்ல முடியாத அளவுக்கு பொதுவெளியில் உதயநிதியின் வருகையால் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. பொதுமக்களிடமும் உதயநிதிக்கான முக்கியத்துவம் திமுக மீது ஒரு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று ஸ்டாலினுக்கு அறிவுரை சொல்லும் அணி சுட்டிக்காட்டி இருக்கிறது.
சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்த அறிவுரையாளர்கள் குழு, தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வின் முடிவில்தான் இந்த கருத்துகள் திமுக மேலிடத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது. திமுக மேலிடமும் சரி, உள்ளே கொண்டு வந்துவிட்டோம்… தீர்வு ஒன்று இருக்கனுமே என எதிர்கேள்வி கேட்டிருக்கிறது. அந்த குழுவும், உதயநிதிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராமல் இருந்தால் இதை சரி செய்துவிடலாம் என யோசனை கூறியிருக்கிறது.
அத்துடன் சட்டசபை தேர்தல் முடிவுகளை வைத்து உதயநிதியின் தேர்தல் களம் குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் மற்றொரு யோசனையும் தரப்பட்டிருக்கிறது. தேர்தல் களத்தில் தேவையற்ற விமர்சனங்களை இதன்மூலம் பெருமளவில் தவிர்த்துவிடலாம்; நம் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியும் தந்தமாதிரி இருக்கும் என்றும் அந்த குழு வலியுறுத்தி இருக்கிறதாம். இதனால் உதயநிதி ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் குறைவு என்றே அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.