திமுக அரசுக்கு இது கஷ்டம் காலம்.அமைச்சர் கே என் நேரு. எடப்பாடி அதிமுகவை அடமானம் வைத்து விட்டதாகவும் பேச்சு .
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியில் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இதில், தற்போதைய திமுக அரசுக்கு இருந்த கஷ்டம் போல் எந்த காலத்திலும் அரசாங்கத்திற்கு கஷ்டம் வந்ததில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார். மேலும், அதிமுக தங்கள் மீதான வழக்குகளை முடித்துக்கொள்ள கட்சியை அடகு வைத்துவிட்டதாகவும், ஒன்றிய அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியைத் தராமல் இழுத்தடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழாவும், தமிழக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டமும் முத்தப்புடையான்பட்டியில் நடந்தது. திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமை தாங்கினார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பழனியாண்டி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஸ்ரீரங்கம் தொகுதியில் அறிவித்த திட்டங்களை திமுக அரசு நான்கே ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது என்றார். பெரியபட்டி பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கண்ணுடையான்பட்டி மற்றும் சமுத்திரம் ஆற்றுப்பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதனால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், அதிமுகவினர் மீண்டும் பிஜேபியுடன் கூட்டணி வைத்துள்ளனர். “நாங்கள் மீண்டும் சேரவே மாட்டோம் என்ற அதிமுகவினர் தற்போது மீண்டும் பிஜேபியோடு கூட்டணி வைத்துள்ளனர். தங்கள் மீதான வழக்குகளை முடித்துக் கொள்வதற்காக கட்சியை அடகு வைத்துள்ளனர்” என்று கூறினார். திமுக கூட்டணி கடந்த 8 ஆண்டுகளாக பிரியாமல் வலுவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “மற்றொருவர் தமிழ்நாட்டில் புதிதாக வந்துள்ளார் அவர் வரும்போதே நான்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” என்று விஜயை மறைமுகமாக சாடினார்.
இப்போது இருந்த கஷ்டம் போல் எந்த காலத்திலும் அரசாங்கத்திற்கு கஷ்டம் வந்ததில்லை என்று நேரு குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் நிதிநிலைமை சரியில்லாததால் கஷ்டம். கொரோனா வந்து இரண்டு ஆண்டுகள் அதற்காகவே செலவு செய்ய வேண்டியதாகிவிட்டது.
ஒன்றிய அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியைத் தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார். “100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி, புதிய பள்ளிகள் கட்டுவதற்கு 2000 கோடி, குடிநீர்த்திட்டமான ஜல் ஜீவன் திட்டத்திற்கு நமக்கு தரவேண்டிய 3500 கோடியை தராமல் நிறுத்திவிட்டனர். தற்போது இந்த ஆண்டு 4000 கோடியையும் தரவில்லை” என்றார். ஒவ்வொரு முறையும் போராடித்தான் ஒன்றிய அரசிடமிருந்து நிதியைப் பெற வேண்டிய நிலை இருக்கிறது. கடுமையான நிதி நெருக்கடியிலும் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று நேரு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் ஆடுதுறை.உத்திராபதி, ஷேக்அலிமாஸ்அலி, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் சந்திரசேகர், மணப்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த ஆரோக்கியசாமி ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

