திருச்சியில் குவார்ட்டர் பாட்டிலுக்குள் தவளை ஒன்று இறந்து மிதந்துக் கொண்டிருந்ததால் மதுபிரியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள சென்னக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். கூலித்தொழிலாளியான இவர் நேற்று சிறுகாம்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில் வாங்கி சென்று கடைக்கு அருகே உள்ள
இருட்டான பகுதியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த போது பாட்டிலில் ஏதோ அடைப்பு இருந்திருக்கிறது. உடனடியாக தனது செல்போன் மூலமாக டார்ச் லைட் அடித்து பார்த்த போது குவார்ட்டர் பாட்டிலுக்குள் இறந்த நிலையில் தவளை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைக் கண்ட அங்கிருந்த ‘குடி’மகன்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து மது பாட்டிலுடன் டாஸ்மாக் கடைக்கு சென்ற வேல்முருகன் அங்கு விற்பனை பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் கூறி முறையிட்டுள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாத டாஸ்மாக் ஊழியர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது கையில் இருந்த மது பாட்டிலை பிடுங்கி கீழே வீசி உடைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வேல்முருகன் சிறுகாம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வாத்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது பாட்டிலில் தவளை கிடந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.