கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேலங்காடு பகுதியை சேர்ந்தவர் வினோத (வயது 34) பெண் கூலித்தொழிலாளி.
இவருக்கு, 16வயது, 14வயது, 10வயது என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்ட நிலையில் அந்த பெண் தனது 3 பெண் குழந்தைகளுடன் திருச்சி மாவட்டம் முசிறி வந்தார்.
அப்போது அய்யம்பாளையம் அருகே சண்முகம் என்பவரின் செங்கல்சூளையில் வேலை செய்தபோது விழுப்புரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபு (வயது36) என்பருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 8 வருடங்களாக செங்கல்சூளையில் வேலை செய்து கொண்டு கணவன், மனைவியாக குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3.9.2022 அன்று அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் உடல் முழுவதும் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருந்ததை அறிந்த முசிறி போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் பற்றி எந்த விவரமும் அறியப்படாததால் பிரேத பரிசோதனை செய்து, சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரபுவின் தந்தை ஆறுமுகம், தனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என முசிறி காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் கூலித்தொழிலாளி பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிரபு, தனது பெண் குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார். அதனை நேரில் பார்த்து கண்டித்தும் கேட்காததால் தலையில் அரிவாளால் வெட்டியும், தடியால் அடித்து கொன்று தான் வசித்த கூரை கொட்டகையின் பின்புறம் இருந்த காவிரி ஆற்றில் தள்ளிவிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் போலீசார் விசாரித்ததில், தகவல் உண்மை என்பதும், கொலையான பிரபு தகாத முறையிலும் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காவிரி ஆற்றின் முட்புதரில் சிக்கியிருந்த பிரபுவின் கைலி போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பெண்ணை கைது செய்து, அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், உருட்டுகட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.