டிசம்பர் 8 ஆம் தேதி முதல் திருச்சி-இலங்கை இடையே
புதிய விமான சேவை தொடக்கம்.
திருச்சி இலங்கை இடையே டிசம்பர் 8ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்பவுள்ளது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா, குவைத், உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.
திருச்சி இலங்கை இடையே தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வந்தாலும், திருச்சியில் இருந்து இலங்கை வழியாக துபாய்க்கு சென்று வரும் பயணிகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்குச் சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில், தினசரி இயக்கப்படும் இரு விமானங்களில் பயணிகளுக்கு போதிய அளவு இருக்கைகள் கிடைப்பதில்லை. எனவே திருச்சியில் இருந்து, சென்னையோ அல்லது இலங்கையோ (கொழும்பு) சென்று அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலமாக அரபுநாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு திருச்சி இலங்கை இடையே ஃபிட்ஸ் ஏர் என்ற விமான நிறுவனம் இந்த கூடுதல் சேவையை அறிமுகம் செய்கிறது.
துபாய் செல்லும் பயணிகள் திருச்சியில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலம் பயணிக்கலாம். அதேபோல துபாயில் இருந்து திருச்சி வரும் பயணிகளும் இதே வழியில் திருச்சி வந்து சேரலாம்.
டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள இந்த புதிய விமான சேவை, வாரத்தில் வியாழன், சனி, ஞாயிறு, கிழமைகளில் இயக்கப்படுகிறது.
வியாழக்கிழமைகளில் காலை 10:25 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து புறப்படும் இந்த விமானம் முற்பகல் 11:25க்கு திருச்சியை வந்தடைகிறது. மீண்டும் திருச்சியிலிருந்து 12:25க்கு புறப்பட்டு 1:25க்கு இலங்கை (கொழும்பை) சென்றடைகிறது. சனிக்கிழமைகளில் பகல் 12:45க்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 1:45 க்கு திருச்சி வந்தடைந்து மீண்டும் இங்கிருந்து 2:45 க்கு புறப்பட்டு பிற்பகல் 3:45க்கு கொழும்பை அடைகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் இந்த விமானம் 11 மணிக்கு திருச்சியை வந்து அடைந்து, மீண்டும் 11:45க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 12:45க்கு கொழும்பை அடைகிறது.
அண்மையில் விமான நிலைய ஆணையம் வெளியிட்ட குளிர்கால விமான அட்டவனையில் புதிய விமானங்கள் குறித்த அறிவிப்பு ஏதுமில்லை. இந்நிலையில், புதிய அட்டவனைக்குப் பின்னர் திருச்சி-இலங்கை இடையே புதிய விமான சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல அரபு நாடுகளுக்கும் புதிய சேவைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பகு குறிப்பிடத்தக்கது.