பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரு தொகுதிகளில் சிறுபான்மை மக்கள் அதிகம் என்பதால் விஜய் தனது பெயரை ஜோசப் விஜய் என்று கூறுகிறார். அருட்தந்தை குற்றச்சாட்டு.
சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவருக்கு எப்படி தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று வியாசர்பாடி பேராலய அருட்தந்தை சார்லஸ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் பெயரவில் தான் கிறிஸ்தவராக உள்ளதாகவும், அவர் செயல் அளவில் இல்லை என்றும் விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மதத்தை பார்த்து மட்டும் கிறிஸ்தவர்கள் வாக்கு செலுத்த மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட தயாராகிவிட்டார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் சி.ஜோசப் விஜய் போட்டியிடுவதாக தவெக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜோசப் விஜய் என்று விஜய் எங்கும் அழுத்தமாக சொல்லும் வழக்கம் இல்லை.
ஆனால் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளாகும். இதனால் விஜய் தனது பெயரை ஜோசப் விஜய் என்று கூறியதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வியாசர்பாடி பேராலய அருட்தந்தை சார்லஸ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
தமிழ்நாட்டில் ஏறக்குறைய கூட்டணி முடிவு செய்யப்பட்டு, இடங்கள் யாருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகி இருக்கிறது.
என்னிடம் சிலர் வந்து கேட்டார்கள்.. யாருக்கு வாக்கு அளிப்பீர்கள் என்று கேட்டனர். விஜய் கூட கிறிஸ்தவர் தானே என்று கேட்டார்கள். அதற்கு நான், பெயரில் மட்டும் கிறிஸ்தவராக இருக்க கூடாது. பெயர் சொல்லும் அளவிற்கு கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என்றேன். அவர்களுக்கு தான் எங்கள் வாக்கு.. மதச்சார்பற்ற, மதத்தால் பிரிவினை ஏற்படுத்தாத, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக இல்லாதவர்களுக்கு தான் சிறுபான்மையினர் ஆதரவு.
இப்படிதான் காலகாலமாக சொல்லி வருகிறோம். விஜய் செயல் அளவில் கிறிஸ்தவராக இல்லை. விஜய் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறார் என்று தெரிய வந்தது. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவருக்கு எப்படி தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள். எந்தவொரு அரசியல் போராட்டங்களிலும் கூட விஜய் ஈடுபட்டதில்லை. தமிழுக்காக கூட குரல் கொடுத்ததில்லை.
விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை. சினிமா உலகத்தில் அரசியல் செய்ய நினைக்கிறார். மத்தியில் உள்ள பாஜக தமிழ் மக்களுக்கும், மண்ணிற்கும் துரோகம் செய்து கொண்டே இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு ஆயிரக்கணக்கான கோடியை கொட்டி கொடுக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி கொடுக்க தயங்குகிறார்கள். பாஜகவுடன் கைகோர்த்துள்ளவர்கள் தமிழ் மக்களிடம் ஆதரவை கேட்பது நியாயமற்ற ஒன்று என தெரிவித்துள்ளார்.

