சாகுபடி அதிகரித்தால் விலை குறைந்தது :திருச்சி மாவட்டத்தில் சரிந்து வரும் வாழை விற்பனை.
இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது, திருச்சி மாவட்டத்தில் வயலூர், சோமரசம்பேட்டை,அல்லித்துறை, குழுமணி, பெட்டவாய்த்தலை, லால்குடி, பனையகுறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் நேந்திரன் வாழை சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சாகுபடி செய்யப்படும் நேந்திரன் வாழை அனைத்தும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, கேரளாவில் நேந்திரன் வாழை உணவின் முக்கிய பொருளாக உள்ளது குறிப்பாக பஜ்ஜி, சிப்ஸ் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு அங்கு பெருமளவு நேந்திரன் வாழைக்கு சந்தை உள்ளது.
நல்ல விலை கிடைப்பதால் நேந்திரன் வாழை சாகுபடிக்கு விவசாயிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர், இதனிடையே கடந்த ஆண்டு நேந்திரம் வாழைக்காய் கிலோ 46 ரூபாய்க்கு விற்பனையானதுடன், ஒரு வாழைத்தார் ரூ. 400-ல் இருந்து ரூ.450 வரை விற்பனையானதால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது, ஆனால் நடப்பாண்டு 1 கிலோ நேந்திரம் வாழை ரூ10 – 11 ரூபாய்க்கு மட்டுமே விலை போவதால் நேந்திரன் பயிரிட்டுள்ள வாழை விவசாயிகள் தலையில் பேரிடியாய் விழுந்துள்ளது.
தற்போது வயலூர் பகுதிகளில் நேந்திரன் வாழை அறுவடை செய்து அதனை சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பும் பணியில் வாழை விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
உரம், மருந்து, சவுக்குகட்டை, மற்றும் விவசாய கூலி உள்ளிட்டவகைளை கணக்கிட்டால் ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவிட்டு விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு கூட வாழைக்காய் விற்பனை ஆகவில்லை. இதனால் நஷ்டத்தைதான் சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வீட்டில் உள்ள நகைகளை தனியார் வங்கியில் அடகு வைத்து நடப்பாண்டு கிடைக்கும் லாபத்தைக்கொண்டு அதனை மீட்டுவிடலாம் என்று நம்பியிருந்த நிலையில் இனி வட்டிகட்ட கூட முடியாது, அடுத்த வருடம்தான் இனி மீட்க முடியுமோ என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அதேபோன்று அரசு வாழை பயிரிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அரசே வாழையினை கொள்முதல் செய்து அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் மூலம் விவசாயிகள் நஷ்டம் அடையாமல் தடுக்கலாம் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேந்திரம் சாகுபடி அதிகரித்துள்ளதாலும், கேரளாவில் நேந்திரன் வாழையின் தேவை குறைந்துள்ளதாலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உற்பத்தியை மட்டும் குறிக்கோளாக கொள்ளும் தோட்டக்கலைத் துறை, அழுகும் பொருளான வாழையை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என வேதனையுடன் விவசாயிகள். தெரிவித்து உள்ளார்.

