மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் அரளி விதை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை .
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, கருமகவுண்டம்பட்டி அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31). இவருக்கு ரம்யா (வயது 24) என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். சிவகுமார் போதிய வருமானம் இன்றி மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் அவர் காசநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,சம்பவத்தன்று சிவகுமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி ரம்யா, உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் மது குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறி சிவகுமாரை கண்டித்துள்ளார்.
மனைவி கண்டித்ததால் மிகுந்த மனவேதனை அடைந்த சிவகுமார், அப்பகுதியில் உள்ள ஆற்றுப்படுகை அருகே சென்று விஷத்தன்மை கொண்ட அரளி விதையை அரைத்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிவகுமாரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவக்குமாரின் மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் வையாம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது பழக்கத்தால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

