திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் மற்றும் புகாா் குறித்து விசாரணை மேற்கொள்ளாத தலைமையாசிரியா் ஆகிய இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்து உள்ளனர்.
மணப்பாறையை அடுத்துள்ள தொப்பம்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொத்தமேட்டுப்பட்டியைச் சோ்ந்த தேவசகாயம் மகன் வேளாங்கண்ணி (வயது 55) தலைமையாசிரியராகவும், முத்தப்புடையான்பட்டியைச் சோ்ந்த அருள்சாமி மகன் பாஸ்கா் (வயது 57) ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனா்.
நான்காம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகள் பத்துக்கும் மேற்பட்டோர் இடம் பாஸ்கா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஆசிரியை இதுகுறித்து தலைமையாசிரியரிடம் புகாா் அளித்தற்கு அவா் திங்கள்கிழமை விசாரித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை பாஸ்கா், வேளாங்கண்ணி ஆகிய இருவரும் பள்ளிக்கு வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் திங்கள்கிழமை மாலை பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த டிஎஸ்பி கே.வி. காவியா தலைமையிலான போலீஸாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்துமாணிக்கம், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோா் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
புகாரின் பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் பாஸ்கா் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்து உள்ளனர்.

