தமிழர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது ரயில்வே துறை.நுழைவாயிலில் எழுதப்பட்ட இந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டது.
திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய ரெயில் போக்குவரத்து வசதியை திருச்சி கொண்டுள்ளது. திருச்சியில் இருந்து பிற மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரம்மாண்டமான இடவசதி கொண்ட முன்புற நுழைவு வாயிலையும் கொண்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மண்டல ரெயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலுக்கு ” கர்தவ்ய த்வார்” என்று இந்தி பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு ” கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரெயில்வே. ” கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் ” கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை ” இந்தித் திணிப்பு” மட்டுமே. தெற்கு ரெயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.முன்னாள் தமிழக கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்,திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைக்கோ போன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் திருச்சி திமுக மாநகர மாவட்ட செயலாளரும்,திருச்சி மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாவட்ட துணை செயலாளரும்,கவுன்சிலருமான முத்து செல்வம்,பகுதி செயலாளர்கள் காஜா மலை விஜி ,மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் சென்று நுழைவாயில் இருந்த கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று மாலை ரயில்வே துறை ஊழியர்கள் நுழைவாயிலில் இருந்த இந்தி எழுத்துக்களை அகற்றினார்.

