Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்க கவன ஈர்ப்பு போராட்டம். கலைஞர் 100 வயது வரை இருந்திருந்தால் இந்த 100வது போராட்டம் நடந்திருக்காது. கண்டன உரையில் மாநில தலைவர் இளங்கோவன்.

0

'- Advertisement -

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களிப்போம்:

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போராட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு 1000க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு.

பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால்

வருகின்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களிப்போம் என்று 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் அறிவித்துள்ளது.திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.

தொடர்ந்து சங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 

 

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் 12 ஆண்டுகளாக பணி இன்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். கடந்த கால அரசு 2018 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்கள் மீண்டும் மற்றொரு நியமனத் தேர்வு எழுத வேண்டும் என அரசாணை 149-யை நிறைவேற்றியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் (2-10-2020) அன்றைய தினம் நாங்கள் தர்மபுரியில் நடத்திய போராட்டத்தின் போது இந்த அரசாணை 149 இருள் சூழ்ந்த அரசாணை மற்றும் அராஜக அரசாணை என்றும், ஏற்கனவே தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்பது ஊழலுக்கு வழிவகுக்கும். ஆகையால் கவலை வேண்டாம். ஆறு மாதத்தில் ஆட்சி முடிகிறது. திமுக கழக ஆட்சி அமைந்த உடன் நியமன தேர்வை ரத்து செய்துவிட்டு வேலை வாய்ப்பு, பதிவு மூப்பு சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்தார். இதனை முழுமையாக நாங்கள் நம்பி திமுக விற்கு கடந்த தேர்தலில் பணியாற்றி வெற்றி பெற செய்தோம். ஆனால் இதுவரை பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இந்த அரசு எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாமல் வஞ்சிக்கிறது என குற்றம் சாட்டினர்.

மேலும் இதுவரை 99 போராட்டங்களை நடத்தியும், 60 முறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எங்களுக்கு எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

 

ஆகையால் இன்றைய தினம் நூறாவது போராட்டமாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.

 

எங்களுடைய கோரிக்கையை முன்வைத்து உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 2000 கோரிக்கை மனுக்கள் அளித்தும் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. வாழ்வாதாரம் இழந்து நாங்கள் அல்லல்பட்டு வருகிறோம்.

 

 

எனவே வருகின்ற தை 1 – ந் தேதி க்குள் எங்களுடைய கோரிக்கையின் மீது இந்த அரசு கவனம் செலுத்தி நல்ல அறிவிப்பினை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைய நாங்கள் பணியாற்றுவோம். மாறாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றால் 2026 தேர்தலில் எங்கள் விரல்களால் திமுகவிற்கு பொங்கல் வைத்து வீட்டிற்கு அனுப்புவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்தப் போராட்டத்தில் மாநில ஊடகப்பிரிவு அமைப்பாளர் வடிவேல், ரோகிணி,மாநிலத் துணைத் தலைவர் பிரபாகரன்,மாநிலச் செயலாளர் சண்முகப்பிரியா,

மாநில பொருளாளர் ஹரிஹரசுதன்,

மாநில அமைப்பாளர் ஸ்ரீதர், மாநில பொறுப்பாளர் ஏகாம்பரம், மாநில ஊடகப்பிரிவுச் செயலாளர் சிவக்குமார், மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முருகன், மாநில துணைப் பொருளாளர் ராமச்சந்திரன், மகளிர் அணி செயலாளர் சுகுணா தேவி, மாநில துணை அமைப்பாளர் தினேஷ் பாபு, மாநில நிர்வாகிகள் அன்பரசு ,பேச்சி முத்து, அன்புமணி, காந்திமதி, ரம்யா, தேவராஜன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தால் திருச்சி கலெக்டர் அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.