பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அநாகரிகமாக பேசிய
திருச்சி போலீஸ் தலைமை காவலர் சஸ்பெண்ட்.
போலீஸ் கமிஷனர் நடவடிக்கை.
திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமைக் காவலர் (ஏட்டு) சேக் முகமது அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் உதவி ஆய்வாளர், தனது உயர் அதிகாரிகளிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதே காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் சேக் முகமது, பணி நேரத்தில் தன்னிடம் தவறான முறையில் (அநாகரீகமாக) பேசியதாகவும், மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அந்தப் பெண் அதிகாரி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், திருச்சி மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் துறை ரீதியான முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் தலைமைக் காவலர் சேக் முகமது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.
காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக, சேக் முகமதுவை பணியிடை நீக்கம் செய்து திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் திருச்சி காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

