திருச்சி போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.மோசடி நபர் கை கால்களை கட்டி தூக்கி வந்த தம்பதியினர்.
திருச்சி அண்ணாசிலை அருகேயுள்ள பூசாரி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அக்பர்கான் என்பவரது மனைவி பாத்திமா அண்ணாசிலை அருகே சூப் கடை நடத்தி வருகிறார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுவண்டி கடை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை விண்ணப்பித்திருந்த நிலையில், குறைதீர்க்கும் முகாம் நாளில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு மனு அளிக்க வந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் நான் என கூறி வந்த நபர் பாத்திமா மற்றும் அக்பர்கானிடம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கலெக்டர் அலுவலகத்தில் கூறி தள்ளுவண்டி வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் உள்ளே சென்று உள்ளார்..வெகு நேரம் ஆகியும் திரும்பி வராத நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டது அறிந்த தம்பதியினர் இருவரும் ஆட்சியரிடமும், அதே நேரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்து சென்றனர்.

மேற்படி மோசடி டிப்டாப் ஆசாமியை கடந்த ஒன்றரை மாதமாக தம்பதியினர் தேடிவந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை ஜங்ஷன் பகுதியில் நின்று கொண்டிருந்த மோசடி ஆசாமியை கணவன் – மனைவி இருவரும் பொதுமக்கள் உதவியுடன் துரத்திப் பிடித்தனர். துரத்திப் பிடித்தவரை நேற்று காலை நடைபெற்றுக்கொண்டிருந்த மக்கள் குறைதீர் முகாமில் ஆட்சியரிடம் ஒப்படைக்க ஆட்டோவில் கை கால்களை கட்டி அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்டோவினை தடுத்து நிறுத்திய போலீஸார் மேற்படி நபரை விசாரித்ததில், மோசடி டிப்டாப் ஆசாமியின் பெயர் மணி (வயது 45), கருர் பிரம்மதீர்த்தசாலை, பகுதியை சேர்ந்தவர் என்பதும், தாலுக்கா அலுவலகத்தில் பணியாற்றி வேலையை விட்டு நின்றதும், இதுபோன்று பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை ஏமாற்றி குற்ற செயல்களை அரங்கேற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேற்படி, மோசடி நபர் குறித்து திருச்சி போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளியை பாதிக்கப்பட்டவர்களே ஆட்டோவில் கட்டி இழுத்து வந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

