Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்கள் கூட ( அருண் நேரு ) பதவிக்கு வந்துள்ளார்கள் . கட்சியில் தொடரும் வாரிசு அரசியலால் கொந்தளிக்கும் மாவட்ட செயலாளர் வைரமணி .

0

'- Advertisement -

.தி.மு.க.,வில் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு முக்கிய பதவிகள் வழங்கும் போக்கு தொடர்கிறது. இது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட உதவும் என்பதே காரணமாக கூறப்படுகிறது.

 

சமீபத்தில், கட்சி பொதுச் செயலாளரும்  மூத்த அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு வேலூர் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பதவி அளிக்கப்பட்டது.

முதலில் மாவட்ட பொறுப்பாளர் என்று தொடங்கி, பின்னர் மாவட்ட செயலாளர்  பதவிக்கு உயர்த்தப்படும். இதே போல், கட்சி முதன்மை செயலாளரும்  அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதி எம்.பி.,யாக இருக்கிறார். அவருக்கு திருச்சி மத்திய மாவட்ட செயலாளர்  பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

அருண் நேரு , திருச்சி அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அங்கு, “எனக்கு மாவட்ட செயலாளர்  பதவி கொடுத்தால், அடுத்த சட்டசபை தேர்தலில் எனக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பேன்” என்று உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனால், தற்போதைய திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் கே.வைரமணியின் பதவி பறிபோக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அருண்நேரு திருச்சி மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். அவரது தந்தை நேரு, கட்சியின் முதன்மை செயலாளர் என்பதால், இந்த கோரிக்கைக்கு வலுவான ஆதரவு உள்ளது.

 

இந்த சூழலில், திருச்சி மத்திய மாவட்ட செயலர் வைரமணி கோபத்தில் பேசியுள்ளார். சமீபத்தில், லால்குடியில் அருண் நேரு ஆதரவாளர்கள் ‘பூத் ஏஜன்ட்’ கூட்டத்தை நடத்தினர். அப்போது வைரமணியை அழைக்கவில்லை, அவரது பெயரையும் படத்தையும் எந்த பேனர்களிலும் இடம்பெறவில்லை.

 

இதனால், திருச்சியில் நடந்த ‘என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி’ ஆலோசனைக் கூட்டத்தில் வைரமணி தன் மனக்குறையை வெளிப்படுத்தினார்.

 

 

“மாவட்ட செயலாளராக இருக்கும் என் பெயர், படம் இல்லாமல் சில நிர்வாகிகள் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இது எனக்கு வருத்தம் தருகிறது. வெளியே சொல்லவும் வெட்கமாக உள்ளது” என்று கூறினார். “மாவட்ட செயலாளர் பதவி பெரிதல்ல. கருப்பு, சிவப்பு வேட்டி கட்டிய இந்த வைரமணி, தி.மு.க.,வுக்கு துரோகம் செய்ய மாட்டான். நான் இறக்கும் போது, என் உடலில் தி.மு.க., கொடியை போர்த்த வேண்டும் என்பது என் ஆசை” என்று உருக்கமாகப் பேசினார்.

 

மேலும், “கட்சி உறுப்பினராக கூட இல்லாதவர்கள் ( அருண் நேரு ) பதவிக்கு வந்துள்ளனர். அவர்கள் எப்படி பதவி வாங்கினர் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. முதன்மை செயலருக்கு மாவட்ட செயலாளர் மரியாதை தர வேண்டும். மாவட்ட செயலாளருக்கு ஒன்றிய செயலாளர் மரியாதை தர வேண்டும். சில புல்லுருவிகள் செய்கிற செயல்கள் வேதனை தருகிறது” என்று வைரமணி பேசியிருந்தார் .

 

இந்தப் பேச்சு கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வைரமணி தன் பதவி பறிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து இப்படி பேசியிருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தி.மு.க.,யில் இத்தகைய ‘வாரிசு’ அரசியல் அதிகரிப்பதால், கட்சியில் உள்ள பழைய தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உதயநிதிக்கு ஆதரவாக செயல்படுவதற்காக மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு பதவிகள் வழங்குவது, கட்சியின் அடிப்படை தொண்டர்களை பாதிக்கலாம்.

 

திருச்சி மத்திய மாவட்டத்தில் வைரமணியின் ஆதரவாளர்களும் அருண் நேருவின் ஆதரவாளர்களும் பதற்றத்தில் உள்ளனர். கட்சி தலைமை இந்த கோரிக்கைக்கு என்ன பதில் அளிக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த விவகாரம், தி.மு.க.,யின் உள் கட்சி அரசியலை புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது.

 

தி.மு.க., கட்சியில் மூத்த தலைவர்களின் மகன்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கும் போக்கு தொடர்கிறது. இது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட உதவும் என்பதே காரணமாக கூறப்படுகிறது. சமீபத்தில், கட்சி பொதுச்செயலரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு வேலூர் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.