விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொரு இளைஞரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது.
ஒரே நாளில் 2 இளைஞர்களின் பலியானது, தவெகவுக்குள்ளும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, உயிரிழந்த இளைஞர்கள் குடும்பத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உதவ வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தவெக தலைவர் விஜய் தலைமையில் மதுரையில் 2வது மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றது. சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு, நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு சுமார் 8 மணி வரை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாநாட்டு திடலுக்கு நேற்று அதிகாலையில் இருந்தே தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
வெயில் மண்டையை பிளந்த நிலையில், 60க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மயங்கி விழுந்தனர்.. இதையடுத்து, அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மாநாட்டுத் திடலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ உதவி முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, தவெக மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் இருந்து மதுரைக்கு வந்த பிரபாகரன் (வயது 33) என்ற இளைஞர் மதுரை வந்துகொண்டிருந்தார்.. சக்கிமங்கலம் அருகே இயற்கை உபாதை கழிக்க வாகனத்திலிருந்து கீழே இறங்கிய போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதுபோலவே, மாநாட்டிற்கு வந்த மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன் (வயது 18) என்ற இளைஞர் மாநாட்டுத் திடலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.
பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஏற்கனவே, மதுரை தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்காக விருதுநகரில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை வரவேற்று பேனர் வைக்கும் போது காளீஸ்வரன் என்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. நேற்றைய தினம் 2 இளைஞர்கள் உயிரிழந்தது, மிகப்பெரிய அதிர்வலையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, நீலகிரியில் உயிரிழந்த ரோஷன் குடும்பத்துக்கு கட்சி தலைவர் விஜய் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
தன்னுடைய நண்பர்களுடன் தவெக மாநாட்டுக்கு கோத்தகிரியிலிருந்து வந்திருக்கிறார் ரோஷன்.. மாநாடு முடிந்ததுமே மாலை 5.30 மணிக்கு வீட்டுக்கு செல்வதற்காக வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் மயங்கி விழுந்திருக்கிறார்..
இதைப்பார்த்து பதறிப்போன அவருடைய நண்பர்கள், ரோஷன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சித்துள்ளனர்.. ஆனால், ரோஷன் கண் திறக்காததால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரோஷன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துவிட்டார். பிறகு போலீசார், ரோஷன் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
ரோஷனின் அப்பா குடிக்கு அடிமையானவராம்.. ரோஷனின் அம்மா, மனநலம் பாதிக்கப்பட்டவராம்.. ரோஷனுக்கு 15 வயதில் பள்ளி செல்லும் ஒரு தங்கை இருக்கிறார்.
ஆனால், அவர் சிறுவயதில் இருந்தே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையும் எடுத்து வருகிறார்.. தன்னுடைய குடும்பம் இப்படியொரு சூழ்நிலையில் சிக்கியதால்தான், கொரியர் வேலைக்கு சென்று, அந்த வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார் ரோஷன். தற்போது ரோஷனே உயிரிழந்துவிட்டது, அக்குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.
இவை அனைத்தும் தற்போது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளதால், ரோஷன் குடும்பத்துக்கு தவெக தலைவர் விஜய் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். செய்வாரா விஜய்?