Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திமுகவில் ஒரணியில் இரணி. பொதுமக்கள் நலனுக்காக திமுக தெற்கு மாவட்ட கவுன்சிலர்கள் தெற்கு மாநகர மாவட்ட செயலாளர் மதிவாணன் தலைமையில் வெளிநடப்பு .:

0

'- Advertisement -

 

அரியமங்கலம் குப்பை கிடங்கில் மீன் உணவுதயாரிப்பு தொழிற்சாலை அமைக்க கடும் எதிர்ப்பு :

 

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட கவுன்சிலர்கள் போர்க்கொடி.

 

தெற்கு  மாநகர மாவட்ட செயலாளர் மண்டல் தலைவர்  மதிவாணன்  தலைமையில் துணை மேயர் திவ்யா தனக்கோடி ஒப்பிட்ட  31 கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

 

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

 

 

இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, மு.மதிவாணன் , விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை ஆணையர், நகரப் பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-

 

மண்டல குழு தலைவர் மதிவாணன் : (திமுக)

 

திருச்சி அரியமங்கலத்தில் 47.7 ஏக்கரில் குப்பை கிடங்கு உள்ளது.இந்த குப்பை கிடங்கை பொதுமக்கள் நலன் கருதி முழுமையாக அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். இப்படி இருக்கும் போது குப்பை கிடங்கில் பாதாள சாக்கடை கழிவு நீரை சேகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிணறுகளுக்கும்,நாய்களுக்கான கருத்தடை மையத்திற்கும் இடையே .கோழி கழிவுகளைக் கொண்டு மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.அதை முற்றிலுமாக நிறுத்தி தடை செய்ய வேண்டும்.

இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பொதுமக்கள் இந்த திட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.அமைச்சரும் பொதுமக்களில் கோரிக்கையை ஏற்று உடனடியாக பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தார்.இந்நிலையில்,

இதுகுறித்து நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் பணிகளை தொடங்கியது கண்டிக்கத்தக்கது.மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,

இதை கண்டித்தும் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

இதையடுத்து

துணை மேயர் திவ்யா தனக்கோடி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன் முன்னிலையில் 27 திமுக கவுன்சிலர்கள்,காங்கிரஸ் கவுன்சிலர்கள் வக்கீல் கோவிந்தராஜன், எல்.ரெக்ஸ், முன்னாள் மேயர் சுஜாதா.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சுரேஷ் ஆகிய 31 பேர் வெளிநடப்பு செய்தனர்.திமுக மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 31 பேர் வெளிநடப்பு செய்த சம்பவம் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மேயர் அன்பழகன் துணை மேயர் திவ்யா தனக்கோடியை அழைத்து என்னவென்று விவரம் கூறுகிறேன் வாருங்கள் எனக் கூறியதற்கு எங்கள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பணியினை நிறுத்த வேண்டும் என கூறியும் கேட்காதவர்கள் நீங்கள் கூறிய கேட்கப் போகிறார்கள் எனக் கூறி வெளிநடப்பில் ஈடுபட்டார் .

 

பின்னர் மேயர் அன்பழகன் கூறுகையில்:-

 

நீர் நிலைகளில் கோழி கழிவுகளை கொட்டுவதால் நீர்நிலைகள் மாசுபட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் நல்ல திட்டம். துர்நாற்றம் அடிக்காது. இது தொடர்பாக மாநகராட்சி சுகாதார அலுவலர் விளக்குவார் என்றார்.

 

 

மாநகராட்சி சுகாதார அலுவலர்

விஜய் சந்திரன் :-

 

நாளொன்றுக்கு திருச்சி மாநகராட்சியில் 25 டன் கோழி, மீன் கழிவுகள் வெளியேற்றுகிறது.

இந்த கழிவுகளை சாலை ஓரங்களிலும், நீர் நிலைகளிலும் மூட்டை கட்டி போட்டு விடுகிறார்கள்.

முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த கழிவுகளை அப்புறப்படுத்தியது. இப்போது அவர்கள் எடுக்கவில்லை.

கோழி கழிவுகளில் இருந்து

மீன் உணவு தயாரிக்கும் திட்டம்

அறிவியல் பூர்வமாக நவீன முறையில் 1500 முதல் 2000 செல்சியஸ் வெப்ப நிலையில் அழுத்தி மாத்திரைகளாக தயாரிக்கப்பட்டு, இரால் பண்ணைகளுக்கு தீவனமாக அனுப்பத் திட்டமிடப்பட்டது.

இந்தத் திட்டத்தினால் மாசு ஏற்படாது. இது தொடர்பாக செயல் விளக்கம் காண்பிக்க தயாராக உள்ளோம்.

 

 

மாநகராட்சி பொறியாளர்

சிவபாதம் :-

 

அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் 18 லட்சம் டன் குப்பைகள் தேங்கி கிடந்தன. இதை பயோ மைனிங் திட்டத்தின் கீழ்

தற்போது குறைத்து 6.6 லட்சம் டன்னாக குறைத்துள்ளோம்.

மொத்தம் உள்ள ஏக்கர் 47.7 ஏக்கர் பரப்பளவில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் 30 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

சுரேஷ் (சி.பி.எம்..) :

 

அரியமங்கலம் குப்பை கிடங்கை முழுவதுமாக அப்புறப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தொடர்ச்சியாக மீத்தேன் பயோ மைனிங் திடக்கழிவு மேலாண்மை என பல திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது

அதே இடத்தில் கோழி கழிவுகளை மறுசுழற்சி செய்து மீன் உணவாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது ஆகவே இந்த திட்டங்களை கைவிட வேண்டும்.

 

மேயர் அன்பழகன் :

 

கோழிக் கழிவுகளை

மறுசுழற்சி செய்யும் திட்டப்பணி கட்டுமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். அமைச்சருடன் கலந்து ஆலோசனை

செய்துவிட்டு பார்த்துக் கொள்ளலாம்.

 

கோ.கு.அம்பிகாபதி (திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர்):-

 

எனது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மாமன்றத்தை நடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள துணை மேயரே வெளிநடப்பு செய்துள்ளார்.அவர் வெளிநடப்பு செய்வதாக இருந்திருந்தால் இன்று அவர் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டாம்.

 

28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது (மமக):

 

எனது 28- வது வார்டு இனாம் தார் தோப்பு பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக பொது மக்கள் பள்ளி குழந்தைகள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

பள்ளி செல்லும் குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறது.

மேலும் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் பாதைகள் அனைத்தும் மிக மோசமாக இருப்பதால் கழிவுநீர் வெளியே செல்ல இயலாமல் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

எனவே இனாம் தார் தோப்பு பகுதியில் உள்ள சாலைகள், சிறு பாலங்கள் மற்றும் கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து தர வேண்டும்.

மேலும் எனது 28 வது வார்டு ஒத்தைமினார் சம்மர் ஹவுஸ் மற்றும் காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த நான்கு வருடங்களாக எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பாதாள சாக்கடை குழாய்கள், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் வடிகால், சாலைகள் என எந்த பணிகளும் நடைபெறவில்லை.

அப்பகுதி பணிகள் தொடர்பாக நானும் பலமுறை கடிதங்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே ஒத்தமினார், சம்மர் ஹவுஸ், காமராஜர் நகர் ஆகிய பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்கள், குடிநீர் குழாய்கள், சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

 

 

க.சுரேஷ்குமார் (சி.பி.ஐ.) :

 

பொருள் எண்.51ல் வைக்கப்பட்டுள்ளதில் ஒவ்வொரு வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கான நுகர்வுத் தொகை மாதம் ரூ.180/- என 600 சதுர அடி வரையிலும் உள்ள வீடுகளுக்கு மட்டும். அதற்கு மேல் கட்டப்பட்ட வீடுகளுக்கு கட்டண உயர்வு என்பது கூடாது.

பொருள் எண்.52ல் பாதாள சாக்கடை இணைப்பிற்கு வீடுகளுக்கு சேவை கட்டணமாக மாதம் ரூ.60 என்று பெற்று வந்த நிலையில் ரூ.100 என்று உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும். இப்பொருளில் 600 சதுர அடி வீடுகளுக்கு மேல் கட்டப்பட்ட வீடுகளுக்கும் சேவைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 

எல்.ரெக்ஸ் (காங்கிரஸ்):-

 

7 வயது பையனை

நாய் கடித்துள்ளது. கருத்தடை செய்த நாய்களுக்கு வீரியம் அதிகமாக உள்ளது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மொத்தத்தில் தெரு நாய்கள் இல்லாத மாநகராட்சி உருவாக வேண்டும்.

எனது வார்டு பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாமல் உள்ளது.

அதிகப்படியாக தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

25 வாட்ஸ் பல்பு தேவை இல்லை. 90 வாட்ஸ் பல்பு வேண்டும்.

 

அரவிந்தன் (அதிமுக) :-

 

திருச்சி இ.பி. ரோடு பகுதியில் உள்ள லாரி செட், பெரியசாமி டவர், மார்க்கெட் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ஆணையரின் பெயரை போட்டு கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இது தொடர்பாக ஏற்கனவே நான் ஏற்கனவே புகார் அளித்தும் கட்டண வசூல் செய்யும் நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் வார்டு பிரச்சனைகள் குறித்து பேசினர்.

அப்போது கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜய் ,ராமதாஸ் ஆகியோர் திட்டப்பணிகள் மற்றும் பாடு பிரச்சனைகள் குறித்து பேசினர்.பேசும்போது அவர்கள் மேயர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இன்று திருச்சி மாமன்ற கூட்டத்திலிருந்து கூட்டத்தை நடத்த வேண்டிய திமுகவை சேர்ந்த துணை மேயரே திமுக மேயர் அன்பழகனை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மதுரை, திருநெல்வேலி,சேலம், கும்பகோணம், கடலூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் மேயர் திமுக என்றால் கூட்டணி கட்சியை சேர்ந்தவர் துணை மேயர், திமுகவைச் சேர்ந்தவராக இருந்தால் மேயர் கூட்டணி கட்சி சேர்ந்தவர் . இவர்கள் இடையே தான் மோதல் ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.

 

தற்போது தமிழக முழுவதும் ஓரணியில் திமுக என்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் திருச்சி திமுக இரண்டு அணி ஆகி உள்ளது .( இன்று மாமன்ற கூட்டம் ஆரம்பிக்கும் முன் துணை மேயர் ரூமில் 32 ஆவது வட்ட செயலாளர் தனக்கோடி தலைமையில் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கவுன்சிலர்களும் அமர்ந்து கூட்டம் தொடங்கியவுடன் வெளிநடப்பு செய்ய வேண்டுமென ஆலோசித்து தான் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .)

 

ஆம் திமுக மேயர் அன்பழகனை கண்டித்து திமுகவை சேர்ந்த துணை மேயர் திவ்யா தனக்கோடி தலைமையில் மண்டல தலைவர் மதிவாணன், அரியமங்கலம் மண்டல் தலைவர்  கிறிஸ்தவ நல்லிணக்கத்தை சேர்ந்த ஜெய நிர்மலா  ,கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து உள்ளனர். இதனை மற்ற மாவட்டங்களில் எடுத்த நடவடிக்கை போல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு மாமன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள துணை மேயரே வெளிநடப்பு செய்துள்ளதால் உடனடியாக துணை மேயரை மாற்ற வேண்டும் என திமுகவை சேர்ந்த  சிலர் கவுன்சிலர்கள் கூறுகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.