திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இரண்டு நபர்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை குடிநீா்த் தொட்டி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக ஜீயபுரம் போலீஸாருக்கு நேற்று முன்தினம் திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்த போது, மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியில் மணல் கடத்திய ஸ்ரீரங்கம் வட்டம், கூடலூரைச் சோ்ந்த ஆா். கணேசன் (வயது 26), மற்றும் உறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, 3 யூனிட் மணல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து உள்ளனர்.