திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் மழலையர் மற்றும் துவக்க பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனாலும் இன்னும் பல இடங்களில் குழந்தை தொழிலாளர் முறை இருக்கத்தான் செய்கிறது. அதைத் தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தைத் தொழிலாளர் முறை என்பது குழந்தைகளின் பாலிய பருவத்தையே நரகமாக்கிவிடுகிறது. குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது. அவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை இந்த குழந்தை தொழிலாளர் முறை தடுத்துவிடுகிறது. வறுமை மற்றும் சமத்துவமின்மை ஏற்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்கு வலுவான கொள்கைகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தேவை. முதலாளிகள், தொழிலாளர்கள், சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பங்களிப்பு அவசியம்.
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் அங்கீகரிக்கப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் (2002ம் ஆண்டு முதல்) கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் மழலையர் மற்றும் துவக்க பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது .
பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.