ஸ்ரீரங்கம் ஓய் சாலையில் ஒரே இடத்தில் 2 நாட்களில் 7 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி.
விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள மேமாலூர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மகன் அலெக்ஸ் விஜய் (வயது25). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர் ஊர் ஊராக சென்று தங்கியிருந்து கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி அருள் மேரி (வயது22). இவர்களது 7 மாத கைக்குழந்தை அந்தோணி ஜோஸ்வா. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கரும்பு வெட்டும் பணிக்காக, தனது மனைவி அருள் மேரி, மகன் அந்தோணி ஜோஸ்வா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி திருவரங்கம் ஒய் சாலை (ரோடு) சந்திப்பு பகுதியில் நேற்று காலை வந்த போது, அவர்களுக்கு பின்னால் வந்த வேன், இருசக்கர வாகனத்தின்மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறிய அலெக்ஸ் விஜய், மனைவி மற்றும் குழந்தையுடன் கீழே விழுந்துள்ளார். வேன் சக்கரங்கள் ஏறியதில் அருள் மேரியும், குழந்தை அந்தோணி ஜோஸ்வாவும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அலெக்ஸ் விஜையை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அலெக்ஸ் விஜய்யும் இறந்தார்.
விபத்தை ஏற்படுத்திய வேனை விரட்டிப் பிடித்த போலீசார் :
விபத்தை ஏற்படுத்திய வேன் நிற்காமல் சென்று விட்டது. தகவல் அறிந்த போலீசார்அந்த வேனை சுமார் 5 கி மீ தூரம் விரட்டி சென்று பிடித்தனர். விசாரணையில் வேனை ஓட்டியது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 43) என தெரியவந்தது. இது தொடர்பாக திருச்சி வடக்கு போக்கு வரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். .
ஸ்ரீரங்கம் ஒய் ரோடு சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை, இதேபோல இருசக்கர வாகனத்தில் கார் மோதிய விபத்தில் தாய் – மகள் இருவர் உயிரிழந்தனர். அதே இடத்தில் சாலையின் மறு பகுதியில் நேற்று இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதியவிபத்தில் கணவன், மனைவி, குழந்தை 3 பேர் என ஒரு குடும்பமே பலியாகியுள்ளது. ஒரே இடத்தில் இரு நாள்களில் நடந்த இரு விபத்துகளில் 5 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் அங்கு விபத்துகளை தடுக்கும் வகையில் போலீசார், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.