திருச்சியில் நாளை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர் . திருச்சியில் கருப்பு முருகானந்தம் பேட்டி
திருச்சியில் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்வி கொள்கையை ஆதரித்தும், ஏழை மாணவர்களுக்கும் சமமான கல்வி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், திமுகவினுடைய டாஸ்மாக் ஊழலை கண்டித்தும் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள இராணுவ மைதானத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் பாஜக சார்பில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்படும்.
மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக இன்று அந்நிய மொழிகளை நேசிக்க கூடிய ஒரு கட்சியாகவும், இந்த நாட்டினுடைய மொழிகளை வெறுக்க கூடிய ஒரு காட்சியாகவும் உள்ளது என்பதை தமிழக மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக அனைத்து தரப்பட்ட மக்களும், மாணவர்களும் கையெழுத்து இயக்கத்தில் தானாக முன்வந்து கையெழுத்திட்டு உள்ளனர்.

பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்கு வாகன ஏற்பாடுகளோ, பொது மக்களுக்கு பணமோ வழங்குவதில்லை. இந்த பொதுக்கூட்டத்தில் லட்சக்கான மக்கள் ஒன்று கூடி தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், திமுகவின் டாஸ்மாக் ஊழல் மற்ற ஊழல்களை கண்டித்தும் எழுப்பகூடிய குரல் திமுக ஆட்சியை அகற்றக் கூடிய குரலாக இருக்கும்.
இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜகவின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்ற உள்ளனர் என தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர் .