திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மார்ச் மாத இறுதிக்குள் திறக்கப்படும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி .
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பணிகள் அனைத்தையும் மார்ச் 31ஆம் தேதி முடிக்க திட்டம் -அமைச்சர் கே என் நேரு
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மார்ச் இறுதிக்குள் திறக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மார்ச் 15ஆம் தேதிக்குள் அனைத்து வகையான பணிகளையும் முடிக்க அவகாசம் கொடுத்துள்ளதாக கூறிய அவர், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பின் தமிழ்நாட்டில் அதிநவீன வசதிகளுடன் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களை இணைக்கும் திருச்சி மாவட்டத்தின் மத்திய பேருந்து நிலையம் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.
திருச்சி நகரை ஒப்பிடும் போது மத்திய பேருந்து நிலையம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய தேவையும் எழுந்தது. இருப்பினும் இடத் தேர்வு தொடர்ச்சியாக நடந்து வந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்த பின் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சப்பூரில் ரூ.400 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏற்கனவே பஞ்சப்பூரில் சரக்கு முனையம், டைடல் பார்க் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன. தற்போது ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் அமைவதால், மக்களும் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகள் விரைவாக நடந்து வந்தது. கடந்த ஆண்டு இறுதியிலேயே சுமார் 93 சதவிகித பணிகள் முடிவுக்கு வந்தன.

இதனால் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் உருவாக்கப்பட்டு வந்த வசதிகள் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், நகரும் படிக்கட்டுகள், லிஃப்ட் வசதி, ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்துகள் நிறுத்தம், உள்ளூர் பேருந்துகள் நிறுத்தம், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, ஓய்விடம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
அதேபோல் கழிவறை, கண்காணிப்பு கேமராக்கள், உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தடங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை போல் எல்இடி ஸ்க்ரீன், புல் வெளி பரப்புகள், பூங்காக்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வந்தன. இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திருச்சியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேரு பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தொடர்பான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கே.என்.நேரு பேசுகையில்:-
ஒவ்வொரு இலாகாவிலும் என்னென்ன பணிகள் மீதமுள்ளது என்பதை அறிந்து, அதனை விரைவாக முடிக்க அனைவரையும் அழைத்து பேசினோம். பிப்ரவரி மாதத்திலேயே முடிக்க வேண்டிய பணிகள், மார்ச் மாதத்திலாவது முடிக்க வேண்டும் என்று வேகப்படுத்தி இருக்கிறோம். பேருந்துகளை பஞ்சப்பூர் வரை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. மின்சாரம் மற்றும் ஒப்பந்தத்தாரர்களுடன் பேசி இருக்கிறோம். அவர்கள் மார்ச் 31 வரை நேரம் கேட்டார்கள். நாங்கள் மார்ச் இறுதியில் திறக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளதால், மார்ச் 15க்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டாலும், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும். ஆம்னி பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்து புறப்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இந்த ஆயும் போது அமைச்சர் கே என் நேருடன் திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் , போலீஸ் கமிஷனர் காமினி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பல கலந்து கொண்டனர் .