திருச்சி முக்கொம்பில் சுற்றுலாத் தலத்தில் திரண்டு காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள்
பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று தமிழகத்தில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாசாரங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலாத் தலங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருடன் சென்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி காணும் பொங்கலான இன்று காலையிலேயே திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்திற்கு மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து, குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடியும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் பொழுதைக்கழித்தும் காணும் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கிராமப்புறங்களில் உறவினர்களுடன் ஒன்றுகூடி, உணவு சமைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.
நகர்ப்புறங்களில் கலாசார மாற்றத்தினையடுத்து, இதுபோன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று குடும்பத்தினர், உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். சுற்றுலாவிற்கு வந்தவர்கள் முக்கொம்பு அணையில் பிடிக்கப்பட்ட மீன்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். பலர் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் குடும்பத்துடன் நீராடி மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதிய காரணத்தினால் முக்கொம்பில் காவலர்கள் குவிக்கப்பட்டு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நகரத்தினம் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டார் .