திருச்சியில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பங்கேற்ற திரும்பிய பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது.
கன்னியாகுமரி மாவட்டம், கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில், மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உடற்பயிற்சி ஆசிரியர், கைப்பந்து போட்டியில் விளையாடுவதற்காக திருச்சி அழைத்துச் சென்றுள்ளார்.
டிசம்பர் 26ஆம் தேதி இரவு 9 மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு மீண்டும் திரும்பி வந்துள்ளனர். அப்போது, மற்ற மாணவிகளை அழைத்துச் செல்ல பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த மாணவி தன்னை அழைக்க அப்பா வந்து விடுவார் எனக்கூறி பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறி தனது தந்தைக்காக காத்து நின்று உள்ளார்.
அந்த நேரத்தில் பள்ளிக்கு வெளியே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்ததை மாணவியை கவனித்த பைசல் கான் (வயது 37 ) என்ற நபர் ஏன் இங்கு நிற்கிறாய்’ எனக் கேட்டுள்ளார். அதற்கு பாத்ரூம் செல்ல வேண்டும் என அந்த மாணவி கூறியுள்ளார். உடனே, அருகில் இருக்கும் வீட்டைக் காட்டி ‘இது எனது வீடு தான், நீ மேலே மாடியில் இருக்கும் பாத்ரூம் சென்று வா’ எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த மாணவியும் பாத்ரூம் சென்றுவிட்டு கீழே இறங்கி வந்த போது, அவரை அந்த நபர் வலுக்கட்டாயமாக இழுத்து, அருகில் உள்ள ஒரு அறைக்குக் கொண்டு சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், ஒரு கட்டத்தில் சிறுமி பலமாக கத்தியதால் வெளியே அனுப்பியுள்ளார்.
சிறுமி அழுதபடி வீட்டிற்குச் சென்று தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளார் . இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணலிக்கரையைச் சேர்ந்த பைசல் கானை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.