Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வதை தடுக்கும் விதத்தில் இன்று முதல் அரசு பள்ளிகளில் சேர்க்கை ஆரம்பம்.

0

 

தமிழக அரசுப் பள்ளிகளில் 2024-2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை இன்றுமுதல் மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும், பள்ளி வளாகம் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்களைக் கொண்டும், ஆசிரியர்களை கொண்டும் பேரணி நடத்துவது, துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வது வாகனங்களில் ஒலிபெருக்கியுடன் பள்ளிக்கல்வி துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிவிப்பது, பொது இடங்களில் சுவரொட்டிகள் வாயிலாகவும் விளம்பர தட்டிகள் வாயிலாகவும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்,

வீடு வீடாக சென்று அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பொதுமக்களை சந்தித்து ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று( மார்ச் 1-ம் தேதி) முதலே தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கால தாமதமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறுகின்ற போது அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி சென்று விடுவதாகவும், இதனால் அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை, இதனை தடுக்கும் வகையில், மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்க உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.