
திருச்சி சிவா எம்.பி. வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நபர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருப்பது திருச்சி திமுகவினர் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் திமுக எம்.பி. திருச்சி சிவா வீட்டில் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய நிகழ்வும், அதைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் புகுந்தே தாக்குதல் நடத்திய சம்பவமும் அப்போது தமிழ்நாட்டின் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்தன.
சட்டசபையில் இந்த விவகாரத்தை வைத்து அதிமுக வாக்குவாதம் நடத்தியது .
இதையடுத்து அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான காஜாமலை விஜய், ராமதாஸ், துரைராஜ் ஆகியோரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக துரைமுருகன் மூலம் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். அதேபோல் வழக்குப் பதியவும் அனுமதி அளித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருவை திருச்சி சிவா வீட்டிற்கே அனுப்பி வைத்தார்.
இதனிடையே அதன் பிறகு அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை இன்னும் ரத்தானது போல் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
இந்நிலையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காஜாமலை விஜியும், துரைராஜும் பங்கேற்றது திருச்சி சிவா எம்.பி. தரப்பையும், அவர்களது எதிர் தரப்பையும் கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. அண்ணா அறிவாலய ஊழியர்கள் இவர்களை கூட்ட அரங்கிற்குள் அனுமதித்ததன் மூலம் உதயநிதி ஸ்டாலினையே ஏமாற்றியிருக்கிறார்கள் என அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் இது குறித்து அவரிடம் புகார் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

