Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு. மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதாக கூறியதன் எதிரொலி .

0

'- Advertisement -

 

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நாளை சுவாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளார் மோடி. இந்தக் கோயில் அயோத்தி ராமரின் குல தெய்வம் என்றும் நம்பப்படுகிறது.

பிரதமர் மோடி
இதற்காக பிரதமர் மோடி நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடுக்கு சென்று, அங்கிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்ல உள்ளார்.

இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு திட்டமிட்டிருந்தார்.

இதற்காக, அனுமதி கேட்டு மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்க இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, வீட்டுக் காவலில் வைத்தனர். “நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், துணை ஆணையரே இங்கு வந்து உங்கள் மனுவைப் பெற்றுக்கொள்வார்” என போலீஸார் தெரிவித்தனர்.

அய்யாக்கண்ணு வீட்டைவிட்டு எங்கும் வெளியேறாதபடி அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என வாக்குறுதியளித்து பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார்.

ஆனால், அவர் சொன்னபடி விவசாயிகள் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தவில்லை. இந்தியாவில் 95 கோடி விவசாயிகள் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள். எனவே, பிரதமர் மோடி திருச்சி வரும்போது அவரை கண்டித்து கறுப்புக்கொடி காட்டவோ, அல்லது உண்ணாவிரதம் இருக்கவோ அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்கக் கிளம்பினேன். ஆனால் போலீஸார் என்னைத் தடுத்து வீட்டுச்சிறையில் வைத்து உள்ளனர். எந்த அடக்குமுறை வந்தாலும் அந்தத் தடையை எல்லாம் மீறி நாளை மோடி திருச்சி வரும்போது போராட்டம் நடத்துவோம்” என‌த் தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.