கள்ளச் சந்தையில் விற்பனை:
திருச்சியில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது
300 கிலோ அரிசி, வாகனம் பறிமுதல்
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை, திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாநகரம், அரியமங்கலம் பகுதியில், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் மூட்டைகளுடன் சென்ற நபரை போலீசார் வழி மறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த ஜெ. காஜாமைதீன் (வயது 44) என்பதும், ரேசன் அரிசியை வாங்கி அவற்றை முறைகேடாக கால்நடை தீவனங்கள் தயாரிக்க கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 300 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து காஜாமைதீனை கைது செய்தனர்.