தமிழகத்தின் அரசியல் எதிர் காலத்தை தமிழ்த்தேசிய கூட்டணி முடிவு செய்யும் என்று திருமுருகன் காந்தி பேசினார்.
தமிழ்த்தேசிய கூட்டணி
திருச்சி மரக்கடையில் நேற்று தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள், பெரியார் சாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவை எரிந்த நாள், அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் வகுத்த நாள் போன்ற முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முகமது தாஹா, மே பதினேழு இயக்கம் சுந்தரமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமை தாங்கி பேசும் போது, சாதியை ஒழித்தால்தான் வல்லான்மை பொருந்தியனவாக தமிழன் வருவான் என்று கூறிய பெரியாரின் முழக்கம் தான் தமிழகத்தில் பெரிய முழக்கமாக கடந்த நூற்றான்டில் ஒலித்தது. திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுவது ஏற்புடையது அல்ல. இதன் மூலம் அவர் கூறுவது இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும், சாதியை காப்பாற்ற வேண்டும், சமஸ்கிரதத்தில் மந்திரம் சொல்வது தவறு இல்லை, ஆரிய பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று சொல்கிறார்.
இதை அனைத்தையும் ஆதரிக்கிறார் என்றுதான் அர்த்தம். தமிழ்த்தேசிய கூட்டணியில் பல்லாயிரயிக்கனக்கான இளைஞர்கள் சேர வேண்டும் இந்த அரசியலில் வலிமையாக மாற்றி தமிழகத்தின் அரசியல் எதிர் காலத்தை நாம் முடிவு செய்வோம் என்றார்.

இந்த கூட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ரொஹையா ஆகியோர் சிறப்புறையாற்றினர். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழர் விடியல் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள், அகில இந்திய பார்வார்ட் ப்ளாக், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் சிறப்புறையாற்றினர்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டு அவர் தலைமையில் மேடையில் ஒரு தம்பதிக்கு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்தார்.
இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
முடிவில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் டேவிட் ஆரோக்யராஜ் மற்றும் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் திருச்சி மாநகர செயலாளர் சசிகுமார் ஆகியோர் நன்றி உரையாற்றினர்.