முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி ஜான்சன் குமார் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு:
திருச்சி தி.மு.க. நிர்வாகி ஜான்சன் குமார் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை
இரண்டாவது கூடுதல் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு.
திருச்சி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி திமுக நிர்வாகி உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து இரண்டாவது கூடுதல் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சேகர் வழக்கறிஞர். இவர் மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகரும் ஆவார். இவரை கடந்த 2015 டிசம்பர் 16ஆம் தேதி சமயபுரம் மெயின் ரோட்டில் ஒரு கல்யாண மண்டபம் அருகில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட சேகர்.
இது தொடர்பாக வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆச்சிக்குமார் என்கிற குமார், இளையராஜா, திருச்சி புத்தூர் பாரதி நகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், திருச்சி மத்திய மாவட்ட திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளருமான ஜான்சன் குமார், இருங்களூர் தெற்கு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நாட்டாமை என்கிற நடராஜன், சேலம் சங்ககிரி, வன்னியர் காலடியைச் சேர்ந்த சரவண குமார், பிச்சாண்டார் கோவில் தச்சர் தெருவை சேர்ந்த கனகராஜ், துவாக்குடி அண்ணா நகர் மனோகர், அரியலூர் உடையார்பாளையம் மேல தெருவை சேர்ந்த சுரேஷ் ,அரியலூர் ஜெயங்கொண்டம் நடராஜ் நகர் ராஜி என்கிற செல்வம், திருவையாறு மேல புனவாசல் பகுதியைச் சேர்ந்த பால் எமர்சன் பிரசன்னா ,கடலூர் காட்டுமன்னார்கோவில் உத்தர சோலை பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், கரூர் ஆதி விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜா, சமயபுரம் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோரை சமயபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ஆச்சிகுமாரின் அண்ணன் மகனை சேகர் ஏற்கனவே கொலை செய்த நிலையில் பழிக்கு பழியாக கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதில் இளையராஜா,
திருச்சி மத்திய மாவட்ட திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன் குமார், நாட்டாமை என்கிற நடராஜன், கனகராஜ், ஹரி கிருஷ்ணன், செந்தில் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான குமார், ராஜா ஆகிய இருவரும் இறந்துவிட்டனர்.
மேலும் நான்கு பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு வக்கீலாக பாலசுப்பிரமணியம் வாதாடினார்.
கொலை வழக்கில் திமுக நிர்வாகி உட்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.