அய்யாக்கண்ணு தலைமையில் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்.
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா், திருச்சியில் நேற்று முதல் மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு கா்நாடகம் தண்ணீா் வழங்க வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுப் பெற வேண்டும். விளை பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை 28ஆம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா்.
மொத்தம் 43 நாள்களுக்கு தொடா்ந்து பல்வேறு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். இதையடுத்து செப்.8ஆம் தேதியுடன் போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைத்தனா். மேலும், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேலும் 2 வாரங்களுக்கு போராட அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து, திருச்சி சிந்தாமணி பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.15) முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினா். இதில், சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து ஊா்வலமாக வந்து போராட்டத்தை தொடங்கினா். பிறகு, மேல் சட்டை அணியாமல் அனைவரும் மணல் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.