இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 58 அன்கள் எடுத்தார். மற்றொரு வீரர் சஞ்சு சாம்சன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசியாக வந்த ஐபிஎல் ஹீரோ ரிங்கு சிங், ஐபிஎல் தொடரிலிருந்து விட்ட இடத்திலிருந்து தொடங்கி அடுத்தடுத்து சிக்ஸர் பறக்கவிட்டார். அவர் 21 பந்துகளில் 3 சிக்ஸர் 2 பவுண்டரி உள்பட 38 ரன்கள் சேர்த்தார். ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் கடின இலக்கை துரத்தி அயர்லாந்து அணி விளையாடியது.
இதில் தொடக்க வீரர் ஆண்ட்ரூ பல்பிர்னி அதிகபட்சமாக 72 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர் ஆகியோர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர். கார்டிஸ் கேம்பர் 18 ரன்களிலும், ஜார்ஜ் டக்ரெல் 13 ரன்னிலும், மார்க் அடைர் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்களில் தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகனாக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டார்.
முதல்முறையாக இந்திய அணி கேப்டனாக பும்ரா தலைமையில் விளையாடிய இளம் வீரர்கள் தொடரை கைப்பற்றியுள்ளனர்.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி 23ம் தேதி புதன்கிழமை இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.