Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வாயில் எலிகளைக் கவ்வி நூதன முறையில் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

0

 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாள்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 14ஆம் நாளில் வாயில் எலிகளை வைத்து வைத்து நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2016 ஆம் ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகள் கையெழுத்தை பெறாமலேயே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேட்டூரில் இருந்து கடலில் கலக்கும் வெள்ள நீரை, மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்றுமாறு கூறினர். அதேபோல் ஆலடியாறு அணையில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு அணையில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேலும், கோயில் நிலங்களில் தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்தும் வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டுகின்றனர். குறிப்பாக தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ 1 ரூபாய்க்கு விற்கும்பொழுது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து. அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக 10 ரூபாய் கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை விலை வராமல்.

தனியார் நிறுவனங்கள் 5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்து 48 மாதங்களில் 7 லட்சம் ரூபாய் கட்ட சொல்லி கையெழுத்து வாங்கியது. 6 லட்சம் ரூபாய் கடனை திருப்பி கட்டிய பிறகு 71 மாதங்களாக்கி 11 1/2 லட்சம் கட்ட சொல்லி, 1 தவனை கட்டவில்லையென்றால் டிராக்டர், கார்களை தூக்கிச் செல்பவர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.

மேலும், 100 நாள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது, என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டுகிறோம்.

100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமான 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல் கிலோவுக்கு ரூ.54, கரும்பு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவிட வேண்டுமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும் காவிரியில் மேகதாது அணை கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில், டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு, “தொடர்ந்து போராடி வருகிறோம். விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க வழியில்லாமல் எலிக்கறி தின்னும் நிலையில் உள்ளோம். இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது என்று கூறுகிறார்கள், ஆனால் விவசாயிகளை இன்று வரை அடிமையாக தான் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து 14 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. விவசாயிகளின் நலன்கள் பற்றி எப்படி அதிகாரிகள் அலட்சிய போக்கில் இருக்கிறார்களோ, அதே போன்று தான் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதில் அலட்சியப் போக்கில் செயல்படுகிறார்கள். உடனடியாக அரசு அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கைகள் குறித்து அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லை என்றால் எங்களுடைய போராட்டம் தீவிரமடையும்” என கூறினார்.

போராட்டத்தில் விவசாய சங்கத்தை சேர்ந்த மாநில துணைத்தலைவர் மேகராஜன், மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.