திருச்சியில் காதல் மனைவியை கொன்ற கணவன் இன்று கைது.
நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம்.
திருச்சியில் சேலையால் கழுத்தை இறுக்கி, தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொலை செய்த காதல் கணவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் மீது போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர் தனது மனைவி சபுராபீவியை பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே ரெயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நேற்று இரவு அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் சபுராபீவியை கீழே தள்ளி அவரது கழுத்தை சேலையால் இறுக்கியுள்ளார்.
பின் தலையில் கல்லைப்போட்டு கொலை பின்னர் அவருடைய தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் சபுராபீவி வீட்டில் இல்லாதது குறித்து அவரது உறவினர்கள் பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று பாாத்தபோது, அங்கு சபுராபீவி கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு சதீஷ்குமார் மனைவியை பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்று கொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் தப்பி ஓடிய சதீஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலையில் பெயிண்டர் சதீஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் துருவி துருவி நடத்திய விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும்,
கடந்த 10 நாட்களாக தனது மனைவி உறவினர் (சகோதரி) வீட்டுக்கு சென்று விட்டதாகவும், சமரசம் செய்து அழைத்து வந்த இடத்தில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் சேலையால் கழுத்தை இறுக்கி, கல்லை போட்டு கொலை செய்ததாகவும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் .தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து சதீஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைகின்றனர்.
காதல் மனைவியை சேலையால் கழுத்தை இறுக்கி, தலையில் கல்லை போட்டு கணவனே கொன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.