லால்குடி:
கோயிலுக்கு மின் இணைப்பு கோரியவரிடம், ‘கலெக்டர் சட்டையை பிடித்து, கன்னத்தில் அறைந்து கையெழுத்து வாங்கி வாங்க’ என்று தரக் குறைவாக பேசிய மின்வாரிய இளநிலை பொறியாளர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, கல்லக்குடி மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர், (வயது 56) கல்லக்குடி, புதிய சமத்துவபுரம் பகுதி மக்கள், அங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு கேட்டு, மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஆனால், மின் இணைப்பு கோரி மனு கொடுத்தவர்களிடம் ஆவேசமாக பேசிய இளநிலை பொறியாளர் ஸ்ரீதர், ‘மாவட்ட கலெக்டரின் சட்டையை பிடித்து, கன்னத்தில் அறைந்து அனுமதி வாங்கிட்டு வா’ என்று தரக்குறைவாகவும் பேசி உள்ளார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
இது பற்றி விசாரணை நடத்திய மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பிரகாசம், இளநிலை பொறியாளர் ஸ்ரீதரை, நேற்று, சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன், லஞ்சம் வாங்கிய புகாரில், சிக்கியவர் இவர் எனக்
கூறப்படுகிறது.