திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை, தாய் உயிரிழப்பு.
திருச்சி
மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுனைபுகநல்லூர் வடகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. டிரைவர். இவரது மனைவி விஜயசாந்தி
(வயது 38). இவர்களுக்கு 15 வயதில் ராகுல்,9 வயதில் சாதனை என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு விஜயசாந்திக்கு கர்ப்பப்பை பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் 3வது முறை கர்ப்பமாக இருந்த விஜயசாந்தி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ள நிலையில் 3 வது குழந்தை 10 மாதம் நிறைவடையும் போது பிரசவ வலி வராததால் கடந்த 20 ஆம் தேதி விஜயசாந்திக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்த போது ஆண் குழந்தை இறந்தது .
இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த விஜயசாந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இந்நிலையில் நேற்று விஜயசாந்தியின் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட போது அதிக மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். பிரசவத்தில் தாயும் குழந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.