புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி புத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்றது.

புத்தூர் கிளை நூலகர் நாகராஜன் வரவேற்றார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
நாணயவியல் சேகரிப்பாளர் லெட்சுமி நாராயணன் புதுக்கோட்டை அம்மன் காசு குறித்து பேசுகையில்,
புதுக்கோட்டை சமஸ்தானம்
1686 முதல் இராமநாதபுரம் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தன்னாட்சியாக இயங்கியது.
1800 முதல் 1948 முடிய பிரித்தானியர்களின் கீழ் சமஸ்தானமாக இயங்கியது.
தன்னாட்சியாக ஆட்சிபுரிந்த புதுக்கோட்டை சமஸ்தான ராஜா ‘அம்மன் காசு’ எனப்படும் சின்னஞ்சிறிய காசு புழக்கத்தில் இருந்தது. அம்மன் காசின் ஒரு பக்கத்தில் புதுக்கோட்டை தொண்டமான் மன்னர்களின் குலதெய்வமான அருள்மிகு பிரகதாம்பாளின் திருவுருவம் பொறிக்கப் பட்டிருக்கும். மறு பக்கத்தில் ‘விஜய’ என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருக்கும். தசரா பண்டிகையின் போது ஏழை அந்தணர்களுக்குத் தானம் அளிக்க அம்மன் காசு 1938-ல் அச்சடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காலணாவுக்கு ஐந்து காசுகள்; ஒரு ரூபாய்க்கு 320 காசுகள் என்ற மதிப்பில் அம்மன் காசு புழக்கத்தில் இருந்தது.
அம்மன் காசினை முதலில் கையால் தயாரித்து வந்தனர். பின்பு நாணய அச்கச் சாலையில் அச்சிட்டனர் என்பது பல்வேறு நூல்களில் அறிய முடிகிறது என்றார்.
நாணயவியல் சேகரிப்பாளர்கள் ரமேஷ், முகமது சுபேர், அரிஸ்டோ, சந்திரசேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.