திருச்சியில் விஷம் குடித்ததாக கூறப்பட்ட கல்லூரி மாணவி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அளித்த மரண வாக்கு மூலத்தால் பரபரப்பு.
சாலையோரம் கிடந்த பிறந்த குழந்தையை கைப்பற்றி விசாரித்ததில் அந்த குழந்தை திருச்சி கல்லூரி மாணவிக்கு பிறந்தது என உறுதியானது இந்த நிலையில் விஷம் குடித்ததாக கூறப்பட்ட கல்லூரி மாணவி இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக மரண வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மாவட்டம் ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி (வியாழக்கிழமை) இரவு குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு பிறந்து சில நாள்களே ( 2 அல்லது 3 நாள்கள்) ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த போலீஸார் குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில்பச்சிளம் குழந்தைகள் வார்டில் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அருகில் எலமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகள் கலைவாணி (வயது 19) என்ற கல்லூரி மாணவி திடீரென விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரும் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இது தெடார்பாக போலீஸார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், ஆற்றங்கரையில் கிடந்தது கல்லூரி மாணவி கலைவாணியின் குழந்தை எனத் தெரியவந்தது. மாணவிக்கு திருமணத்துக்கு முன்பே இக்குழந்தை பிறந்துள்ளதாகவும், வெளியே தெரியாமல் மறைக்க குழந்தையை ஆற்றங்கரையில் வீசியதும் தெரியவந்துள்ளது.
ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவி கலைவாணி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கலைவாணி இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.
முன்னதாக மாசிஸ்திரேட்டிடம் கலைவாணி மரண வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்கு மூலத்தில் தன்னை விஷம் ஊற்றி கொன்றதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது .இதில் கலைவாணி 2 பேர் மீது பரபரப்பு குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்பு மேலும் பல உண்மைச் சம்பவங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.