திருச்சி விமான நிலையத்தில் 35 பயணிகளிடம் சோதனை:
சுமார் 15 கிலோ தங்கம் பறிமுதல்
வெளிநாடுகளில் இருந்து 7 விமானங்களில் வந்த 35 பயணிகளிடம் சுமார் 15 கிலோ தங்கம், திருச்சியில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

திங்கள் கிழமை இரவு சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா நாடுகளில் இருந்து வந்த மொத்தம் 7 சர்வதேச விமானங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி வந்தனர்.
வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பெயரிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் அனைத்து பயணிகளிடமும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 35 பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் பிரத்தியேகமாக வைத்து தீவிர சோதனை மேற்கொண்டதில் அவர்களிடம் சுமார் 15 கிலோ தங்கம் இருந்து தெரியவந்துள்ளது.
அனைத்து விமானங்கள் மற்றும் பயணிகளிடம் நடைபெற்ற இந்த சோதனை திங்கள் இரவு தொடங்கி இந்து செவ்வாய்க்கிழமை பகலிலும் தொடர்ந்து வருகிறது.
இதுவரை மொத்தம் 15 கிலோ தங்கம், பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில், பயணிகள் உரிய வரி செலுத்தி வாங்கி செல்லும் தங்கமும் அடக்கம். எனவே, கடத்தல் தங்கம் பறிமுதல் குறித்த விவரம் இன்று மாலை தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில்,
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டதன், தொடர்ச்சியாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.