2 மாதத்தில் காவிரி பாலத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
காவிரி பாலத்தில் இரண்டு மாதத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு பேட்டி.
கூட்டுறவுத்துறை திருச்சி மாவட்டம் சார்பில் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார்.மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் அரசு வரவேற்றார். திருச்சி மண்டல இணை பதிவாளர் ஜெயராமன் திட்ட விளக்க உரை ஆற்றினார். விழாவில் மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் 1, 365பயனாளிகளுக்கு ரூபாய் 8 புள்ளி 90 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழங்கி சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள், கூட்டுறவுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி துணைப்பதிவாளர்
சாய் நந்தினி நன்றி கூறினார்.
பிறகு தமிழக
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். எவ்வளவு மழை பெய்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது.
சென்னையில் இரண்டு இடங்களில் மட்டுமே பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதுவும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கால்வாய்கள் வெட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நடவுப் பணிகள் முடியும் தருவாயில் யூரியா தட்டுப்பாடு இருப்பதாக சொன்னார்கள்.
இது தொடர்பாக துறை அமைச்சரிடம் பேசி இருக்கின்றேன். விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு கடன் தர கூட்டுறவுத்துறை அமைச்சரிடமும் பேசி இருக்கின்றேன். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் சம்மட்டி வைத்து அடித்து விட்டதால் காவிரி பாலத்தின் பேரிங் உட்கார்ந்து விட்டது.
அதனை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த மாதிரியான தொழில்நுட்ப பணிகளை வேகமாக முன்னெடுக்க இயலாது. அதனால் தான் தாமதம் ஏற்படுகிறது. இன்னும் இரண்டு மாத காலத்தில் காவிரி பாலத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி அடிப்படை பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் எடுப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதற்கு எதிர்ப்புகள் வந்துள்ளதால் பழைய முறைப்படி பணி நியமனம் செய்ய தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.