அதிக வட்டி,வேலை வாங்கி தருவதாக
ரூ.50 லட்சம் மோசடி
இளைஞர்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார்.
திருச்சி பாலக்கரை மணல் வாரித் துறை ரோடு பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் அவரது நண்பர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-
நாங்கள் திருச்சி சங்கிலியாண்டபுரம் பெல்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு செல்வோம்.
அப்போது இ.பி. ரோடு பீரங்கிகுள தெரு பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்கிற பார்த்திபன் எங்களுக்கு அறிமுகமானார். அவர் அரசின் இ.சேவை மையத்தில் பணியாற்றி வருவதாக கூறினார்.
மேலும் தமக்கு அதிகாரிகள் மட்டத்தில் செல்வாக்கு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து எங்களில் 8 பேர் அரசு வேலைக்காக பல லட்சம் ரூபாய் அவரிடம் கொடுத்தோம். மேலும் அதிக வட்டி தருவதாக 60,000 30,000 என கார்த்திக் எங்களிடம் வசூல் செய்தார்.
சில மாதங்கள் அந்த தொகைக்கு வட்டி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கார்த்திக் இ.பி. ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரைத் தேடி அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதிக்கு சென்று பார்த்தோம். அங்கும் பலரிடம் அவர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆகவே சம்பந்தப்பட்ட கார்த்திக்கை கைது செய்து எங்களின் பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

