துவாக்குடி அருகே அமைய உள்ள புதிய சுங்கச்சாவடியை மாற்றி அமைக்க அதிமுக மாவட்ட செயலாளர் குமார் கோரிக்கை.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கடிதம் எழுதி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி வாழவந்தான்கோட்டையில் அமைந்துள்ள சுங்கசாவடிக்கு மிக அருகாமையிலேயே சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் துவாக்குடி ஜீயபுரம் அரைவட்ட சாலை ஆரம்பிக்கும் இடத்தில் புதிதாக மேலும் ஒரு சுங்கசாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் அவ்வழியே பயணிக்கும் பொது போக்குவரத்து வாகன ஓட்டிகளும், விவசாய பெருமக்களும், பொதுமக்களும் இரண்டு முறை சுங்ககட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே அரைவட்ட சுற்று சாலையில் அமைய இருக்கின்ற சுங்கசாவடியை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்திட ஆவணம் செய்திட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்பாக கடந்த 25.12.2021 அன்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதப்பட்டது.
எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி இரட்டை வரிவிதிப்பு முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.
அத்துடன் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலையும் அனுப்பி உள்ளார்.