திருச்சி சோமரசம்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி 7ம் வகுப்பு மாணவி பலி.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்.
கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி காவல் நகர் பகுதியை சேர்ந்தவர் வண்ணான் (வயது 45 ) இவரது மகள் நிகிதா
(வயது 12).
இவர் சோமரசம்பேட்டையில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றைய தினம் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக வியாழன் மேடு சாலையில் சோமரசம்பேட்டை பஸ் நிறுத்த பகுதிக்கு நடந்து சென்று சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நிகிதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஸ்ரீரங்கம் இனாம் புலியூர் கீழமேடு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(வயது 23) என்ற இளைஞரும் படுகாயம் அடைந்தார்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
7ம் வகுப்பு மாணவி மோட்டார் சைக்கிள் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது