
தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி
தலைமையில் ஒற்றைத் தலைமை அவசியம்.
திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் பேட்டி.
தற்போதைய நிலையில் அதிமுக வை வலுப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒற்றைத் தலைமை அவசியம் என்றார் அக்கட்சியின் திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் ப. குமார்.
இது குறித்து, திருச்சியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது….
அதிமுக வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதனை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம். தமிழகதத்தில் 75 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அ.தி.மு.க. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். ஆனால் தி.மு.க வுடன் மென்மையான போக்கை கடைப்பிடிப்பவர்கள் ஒரு பக்கமும் கடுமையான போக்கை கடைப்பிடிப்பவர்கள் ஒரு பக்கமும் என இரு கோஷ்டிகளாக செயல்படுகிறது.
கட்சிக்காக உழைப்பவர்களுடன் ஒட்டுத்திண்ணையில் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருப்பவர்களும் கட்சியில் இருந்து வருகின்றனர்.
உதாரணமாக, திருச்சி மாவட்டத்தில் கட்சி நிர்வாகி தேர்தலில் போட்டியிட ஒருவர் விண்ணப்பம் அளித்தார். அவரை முன்மொழிய, வழிமொழிய கூட ஆள் இல்லை. அதன் பின்னர் முன்மொழியப்பட்ட, வழிமொழியப்பட்டவர்களின் பெயர் பட்டியலுடன் அவரது பெயரும் அனுப்பப்பட்டது. ஆனால் தலைமையில் இருந்து யாருக்கு முன்மொழிய, வழிமொழிய ஆள் இல்லையோ அவரின் பெயர் நிர்வாகியாக அறிவிப்பு வருகிறது. அவர் சென்னைக்கு சென்று யாரையோ பிடித்து பதவி வாங்கி வந்துவிட்டார்.
இப்படி இருந்தால் மற்ற நிர்வாகிகள் எப்படி செயல்படுவார்கள். தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும். திமுகவை சட்டமன்றத்திற்குள்ளேயே புகழ்வது.
எம்எல்ஏக்கள் திமுகவினரை பார்த்து புத்தகம் பரிசளிப்பது. இவையெல்லாம் தொண்டர்கள் மத்தியில், பொதுமக்கள் மத்தியில், நாளுக்கு நாள் அதிமுக மீது நம்பிக்கை இழந்து வருகிறது.
அ.தி.மு.க விற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது தான் கடை கோடி தொண்டனின் மனநிலையாக உள்ளது.
வரும் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் நம்பிக்கையான தலைவர் இருந்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும்.
தலைவர்கள் மீது நம்பிக்கை இருந்தால்தான் தொண்டர்கள் வேலை செய்வார்கள். பொதுமக்கள் வாக்களிப்பார்கள். இப்படி ஒரு கோஷ்டி அரசியலை நடத்தினால், அதிமுக வரும் தேர்தல்களில், மிகப்பெரிய பின்னடைவை அடைவதற்கான சூழ்நிலையை இந்த இரட்டை தலைமை உருவாக்கும். அதனால்தான் ஒற்றை தலைமை கேட்கிறோம்.
கட்சியை புத்துணர்ச்சியோடும் எழுச்சியோடும் வீறுநடை போட்டு நடத்த வேண்டி உள்ளது.
அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் நாலரை ஆண்டுகாலம் முதல்வராக இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்துக்கொடுத்த கொள்கைகளின் படி ஆட்சி நடத்தியவர். அவர் தி.மு.க எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்.
முதல்வர் பதவியில் துணிவோடும் தனித்தன்மையோடும் செயல்பட்டவர். எனவே, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அந்த ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்றார் அவர்.
பேட்டியின்போது திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர், பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி மற்றும் வட்ட செயலாளர்களும் மாவட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

