தமிழகம் இன்னும் 3 வேகமாக செயல்பட வேண்டும்.திருச்சியில் மத்திய இணை மந்திரி பிரகலாத்சிங் படேல் பேட்டி.
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் ஜல்சக்தித்துறை மத்திய இணை மந்திரி பிரகலாத் சிங் படேல் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை நேற்று மாலை பார்வையிட்டார்.
அப்போது அணை தொடர்பான விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து கொள்ளிடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகளையும் பார்வையிட்டார். அதன்பிறகு மத்திய இணை மந்திரி பிரகலாத் சிங் படேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளில் ஜல்ஜீவன் திட்டம் தொடர்பான செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் 12 சதவீதம் பின்தங்கி உள்ளது.இது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவு. வருகிற 2024-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். அதை எட்ட வேண்டும் என்றால் தமிழகம் இன்னும் மூன்று மடங்கு வேகமாக திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை அனைவரும் தண்ணீர் சேமிப்பதை அவசியம் என உணர வேண்டும். ஒரு சொட்டு தண்ணீரையும் வீணாக்கக்கூடாது. ஜல்ஜீவன் திட்டத்துக்காக ஏற்கனவே தமிழகஅரசுக்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை நிதி கிடைப்பதற்கு அதற்கான வேலைகள் எவ்வளவு விரைவாக நடைபெறுகிறதோ, அவ்வளவு விரைவாக அதற்கான நிதி தானாகவே மாநிலங்களுக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் சிவராசு, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்லம் செயற்பொறியாளர்கள் மணிமோகன், கீதா மற்றும் பலர் உடன்இருந்தனர்.
இதனை தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத்சிங் படேல் திருச்சி அரியமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.