Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நலமுடன் இல்லம் திரும்பி விட்டேன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.

0

'- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

என்னுயிரே… என்னணுவே… என் தமிழே…

மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன்.

என்னை தன் சொந்த சகோதரர் போல கவனித்து சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர் ஜே.எஸ்.என்.மூர்த்தி தலைமையிலான மருத்தவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், என் இரு மகள்களுக்கும், ஊண் உறக்கம் இன்றி உடன் இருந்து கவனித்துக் கொண்ட என் அணியினருக்கும், தம்பி மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் விரைந்து நலம் பெற வேண்டும் என வாழ்த்திய இனிய நண்பர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அருமை நண்பர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் என் நன்றிகள்.

என் ஆரூயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அன்புச் சகோதரர் இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர்கள் சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீபிரியா உள்ளிட்ட திரைத்துளி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊடகவியளாளர்களுக்கும் என் நன்றிகள்.

என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கும், விக்ரம் திரைப்படக் குழு வினருக்கும், பிக்பாஸ் அணியினருக்கும், விஜய் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

நான் விரைந்து குணம் அடைய வேண்டும் என ஆயலங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும், நேர்த்திக் கடன்கள் செய்தும், அன்னதானம், ரத்த தானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், என்னை தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கிய தங்கள் பிரார்த்தனைகளும் எனக்காக வேண்டிக் கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

பிரார்த்தனைகளுக்குப் பலன் உண்டா என்று எனக்குத் தெரியாது ஆனால், உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னைக் கொரோனாவில் இருந்து கரை சேர்த்திருக்கிறது.

என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி. உதவிய உள்ளங்களுக்கு நன்றி. எனக்காகக் கலங்கிய கண்களுக்கு நன்றி. தொழுத கரங்களுக்கு நன்றி. என் பொருட்டு ஓடிய கால்களுக்கு நன்றி.உன்னத உறவுகளைத்தந்த வாழ்க்கைக்கு நன்றி.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.