திருச்சி அரியமங்கலத்தில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய பயணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது (45) இவர் அரசு மாநகர பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார்.
நேற்று அரசு பேருந்து துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் அரியமங்கலம் மேம்பாலம் அருகே வந்த போது அதில் வந்த பயணியான மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் ( வயது 22) என்பவர் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்து வந்துள்ளார். அப்போது நடத்துனர் ராமசாமி சீனிவாசனை பஸ் உள்ளே வரும்படி கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. திடீரென சீனிவாசன் ராமசாமியை தாக்கியுள்ளார். இதுகுறித்து ராமசாமி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.