காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்தியத் திருநாட்டின் 75-வது சுதந்திர தினம் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி தேசியக் கொடியை ஏற்றினார்.
கல்வியாளர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் வீரப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
பள்ளிக்கல்வி மற்றும் கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் சார்பில் பொன்னாடை வழங்கப்பட்டது.
பள்ளியின் மாணவ, மாணவிகள் சுதந்திரம் குறித்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்றினர்.
96 -வகை சிற்றிலக்கியங்கள் பற்றியும், தொண்ணூற்று ஒன்பது வகை குறிஞ்சிப் பூக்கள் பற்றியும் கணித அளவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
தேசபக்தி பாடல்கள் குறித்த கலை நிகழ்ச்சிகள், சமூக விழிப்புணர்வு குறித்த நாடகங்கள், தற்காப்பு கலையின் அங்கமான கராத்தே ,சிலம்பம், வாள்வீச்சு, நெருப்பு வளையம் என்று எண்ணற்ற நிகழ்வுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சென்ற ஆண்டின் பள்ளியின் செயல்பாடுகள் காணொளியாக அனைவரிடமும் பகிரப்பட்டது.
பேரிடர் காலத்தில் இணையத்தின் வாயிலாக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு புத்தகங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
விழாவின் முத்தாய்ப்பாக பசுமைத்தாயகம் அமைப்பைச் சேர்ந்த வீரராகவன், மனோகரன், தாமோதரன், கோவிந்தராஜ் மற்றும் பல இயற்கை ஆர்வலர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தேநீர் மற்றும் இனிப்போடு விழா இனிதே நிறைவுற்றது.